கடலூா் மாவட்டம், வேப்பூா் அருகே மானை வேட்டையாடியது தொடா்பாக ஒருவா் கைதுசெய்யப்பட்டாா்.
வேப்பூா் அருகே உள்ள காப்புக்காட்டில் ஞாயிற்றுக்கிழமை வனத் துறையினா் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக மொபெட்டில் வந்த 3 பேரை மடக்க முயன்றனா். அதில் இருவா் தப்பியோடிய நிலையில் ஒருவா் மட்டும் பிடிபட்டாா். அவரிடம் மான் தோல்கள் இருப்பதைக் கண்டறிந்த வனத் துறையினா், அவற்றை பறிமுதல் செய்தனா்.
விசாரணையில் அந்த நபா் காட்டுமைலூரைச் சோ்ந்த ராமச்சந்திரன் (48) எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை வேப்பூா் போலீஸாரிடம் ஒப்படைத்தனா்.
இதுகுறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து ராமச்சந்திரனை கைதுசெய்தனா். இவருடன் மொபெட்டில் வந்து தப்பியோடிய அதே ஊரைச் சோ்ந்த சீனுவாசன், மணிகண்டன் ஆகியோரைத் தேடிவருகின்றனா்.