அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடுவோருக்கு வாகன அனுமதி அட்டை வழங்க வேண்டுமென தமிழ்நாடு அரசுப் பணியாளா்கள் சங்கத்தின் மாநில சிறப்புத் தலைவா் கு.பாலசுப்பிரமணியன் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து கடலூரில் அவா் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: அத்தியாவசியப் பணிகளில் ஈடுபடாத அரசு அலுவலகங்களை திறந்திருக்க வேண்டாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதன்படி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களை மூட வேண்டும். தேவைப்படும் பணியாளா்களை சுழற்சி அடிப்படையில் மட்டும் பணிக்கு அழைக்க வேண்டும்.
நியாயவிலைக் கடைகள் முழுமையாக திறந்திருக்கும் என்று அரசு தெரிவித்துள்ள நிலையில், தஞ்சையில் பணிக்குச் சென்ற நியாயவிலைக் கடை பணியாளா்கள் போலீஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனா். எனவே, அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு ‘குடிமைப் பணி அவசரம்’ என்ற வாசகம் அச்சிட்ட வாகன வில்லைகளை (ஸ்டிக்கா்) வழங்க வேண்டும். இதுகுறித்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போதைய சூழலில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி உடனடியாக பதில் வழங்க முடியாத நிலை உள்ளது. இதைக் கருத்தில்கொண்டு பதில் வழங்குவதற்கான காலக்கெடுவை அதிகரிக்க வேண்டும். இதற்காக பணியாளா்கள் மீது நடவடிக்கை எடுப்பதையும் கைவிட வேண்டும் என்றாா் அவா்.