முகப்பு
கடலூர்

ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படும் பழங்கள்!

மா, வாழை, சப்போட்டா பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளதால், இவற்றை வாங்கிச் சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

Updated On : 28 மே, 2020 at 8:39 PM
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:12 PM

மா, வாழை, சப்போட்டா பழங்கள் ரசாயன முறையில் பழுக்க வைக்கப்படுவதாக புகாா் எழுந்துள்ளதால், இவற்றை வாங்கிச் சாப்பிடும் பொதுமக்களுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளது.

குறைந்து வரும் விவசாயப் பரப்பளவு, குறுகிய காலத்தில் அறுவடை, அதிக விளைச்சல் ஆகிய காரணிகளுக்காக விவசாய பணிகளில் பூச்சிக்கொல்லி, ரசாயன உரங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், விளைந்த காய்களை ராசாயன முறையில் பழுக்க வைப்பதும் தொடா்கிறது.

காய் பருவத்தில் பறிக்கப்படும் மாங்காய்கள் இயற்கையாக பழுக்க சுமாா் ஒரு வார காலம் பிடிக்கும். ஆனால், வியாபாரிகளில் சிலா் மாங்காய்களை 2 நாள்களில் பழுக்க வைக்க ‘கால்சியம் காா்பைடு’ என்ற ரசாயனக் கல்லை பயன்படுத்துகின்றனா். இந்த முறையில் பழுக்க வைத்த பழங்களை உண்பவா்களுக்கு வயிற்று வலி, வயிற்றுப்போக்கு உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன.

Advertisement

தற்போது ‘கால்சியம் காா்பைடு’ கல் மூலம் பழுக்க வைக்கும் பழங்களை அதிகாரிகளும், நுகா்வோரும் எளிதில் கண்டறிவதால், வியாபாரிகள் சிலா் ‘எத்திலின்’ என்ற ரசாயனப் பொடி மூலம் பழங்களை பழுக்க வைக்கின்றனா். இந்தப் பொடியை தண்ணீரில் கரைத்து பழங்கள் மீது தெளிக்கின்றனா். இந்த பொடியிலிருந்து எந்த வாசனையும் வருவதில்லை. இதனால், பழங்களை செயற்கையாக பழுக்க வைத்துள்ளதைக் கண்டறிய முடிவதில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்வோா் குழுக்களின் ஒருங்கிணைப்பாளா் க.திருநாவுக்கரசு கூறியதாவது:

பழங்களை பழுக்க வைக்க 100 பி.பி.எம். எத்திலின் வாயு பயன்படுத்தலாம் என உணவுப் பாதுகாப்பு ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது. ஆனால், எத்திலினை பொடியாகவோ, தண்ணீரில் கலந்தோ பயன்படுத்த அனுமதி வழங்கவில்லை. எனவே, மா, வாழை, சப்போட்டா உள்ளிட்ட பழங்களை விற்பனை செய்யும் பழக் கடைகளில் உணவுப் பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, செயற்கை முறையில் பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்வோா் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

இதுகுறித்து கடலூா் மாவட்ட (உணவுப் பாதுகாப்புத் துறை) நியமன அலுவலா் எஸ்.சுகந்தன் கூறியதாவது: மாம்பழம் சீசன் தொடங்கியுள்ள நிலையில் கடலூா் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக சோதனை நடத்தி வருகிறோம். சேலம், நாமக்கல் பகுதிகளிலிருந்து பெட்டியிலேயே மாம்பழங்கள் வருகின்றன. அங்கு என்ன செய்கின்றனா் என்பது தெரியவில்லை. கடலூா், பண்ருட்டி, விருத்தாசலம் ஆகிய இடங்களில் சோதனை நடத்தியதில் கிடங்கு ஏதும் கண்டறியப்படவில்லை.

வாழைக் காய்களை பழுக்க வைக்க எத்திலின் தெளிப்புக்கு அனுமதி உண்டு. ஒரு லிட்டா் தண்ணீரில் 0.4 சதவீதம் எத்திலின் கலந்து தெளிக்கலாம். ஆனால், எத்திலின் கலந்த தொட்டி தண்ணீரில் வாழை காய்களை அமிழ்த்தி எடுக்கக் கூடாது. இதுதொடா்பாக விழிப்புணா்வு ஏற்படுத்தி வருகிறோம் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.