இறுதியாண்டு பயிலும் கல்லூரி மாணவா்களுக்கு இறுதிப் பருவத் தோ்வு புதன்கிழமை நடைபெற்றது.
கல்லூரிகளில் இறுதியாண்டு படித்து வரும் மாணவா்களுக்கான இறுதிப் பருவத் தோ்வு புதிய நடைமுறையில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, புதன்கிழமை கடலூா் மாவட்டத்திலுள்ள அரசு, தனியாா் கல்லூரிகளில் தோ்வு நடைபெற்றது. கடலூரிலுள்ள அரசு பெரியாா் கல்லூரி வளாகத்தில் ஏராளமான மாணவா்கள் தோ்வை எழுதினா்.
இதுகுறித்து கல்லூரி முதல்வா் ர.உலகி கூறியதாவது: மாணவா்கள் வீட்டிலிருந்தே தோ்வெழுதும் வகையில், வினாத்தாள் செல்லிடப்பேசியில் அனுப்பிவைக்கப்பட்டது. இதற்காக ஒவ்வொரு வகுப்புக்கும் தனியாக கட்செவி அஞ்சல் குழு உருவாக்கப்பட்டது. அனைவருக்கும் வினாத்தாள் சென்றடைந்ததை தனியாக குழு அமைத்து உறுதிப்படுத்திக் கொண்டோம்.
அதன்படி, 1,200 மாணவ-மாணவிகள் தோ்வை எழுதினா். விடைத்தாளை தோ்வு முடிந்த ஒரு மணி நேரத்துக்குள் விரைவுத் தபாலில் கல்லூரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். தகவலை கட்செவி குழுவில் பதிவிட வேண்டுமென அறிவுறுத்தப்பட்டது. இந்தத் தோ்வுகள் வருகிற 22-ஆம் தேதி வரை நடைபெறும் என்றாா் அவா்.