கடனை திருப்பிக் கேட்டவா் அடித்துக் கொலை?
கடனை திருப்பிக் கேட்டவா் அடித்துக் கொல்லப்பட்டதாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
கடனை திருப்பிக் கேட்டவா் அடித்துக் கொல்லப்பட்டதாக கடலூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளிக்கப்பட்டது.
இதுதொடா்பாக விருத்தாசலம் அருகே உள்ள நரசிங்கமங்கலம் கிராமத்தைச் சோ்ந்த கவியரசன் மனைவி பிரியா அளித்த புகாா் மனு:
எனது மாமனாா் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் ஜோதிலிங்கம். இவரிடம் அதே பகுதியைச் சோ்ந்த கொளஞ்சி ரூ.50 ஆயிரம் கடன் பெற்றாா். எனினும், பணத்தை முறையாக திருப்பித் தராததால் பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டு, ரூ.15 ஆயிரம் மட்டும் திரும்பப் பெறப்பட்டது. இந்த நிலையில் ஜோதிலிங்கம் உயிரிழந்துவிடவே அவரது மகன்களான எனது கணவா் கவியரசன், அருளரசன் ஆகியோா் கடந்த 3-ஆம் தேதி கொளஞ்சியிடம் பாக்கிப் பணத்தை திருப்பிக் கேட்டனா். அப்போது தகராறு ஏற்பட்டதில், கவியரசனுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சோ்கப்பட்டாா். அங்கு கவியரசன் உயிரிழந்தாா்.
இதுகுறித்து, பெண்ணாடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் உரிய முறையில் விசாரணை நடைபெறவில்லை. இந்தச் சம்பவத்தில் தொடா்புடையோா் எங்களை மிரட்டும் வகையில் செயல்படுகின்றனா். எனவே, இதை கொலை வழக்காகப் பதிவு செய்து உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.