ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி பயிற்சி மருத்துவா்கள் வேலைநிறுத்தம்
பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்கள் ஊக்கத் தொகை வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்கள் ஊக்கத் தொகை வழங்கக் கோரி, வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பணியில் ஈடுபட்ட ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்களுக்கு மாத ஊதியமாக ரூ. 3 ஆயிரம் வழங்குவதைக் கண்டித்தும், கடந்த 8 மாதங்களாக அந்தத் தொகை வழங்கப்படாததைக் கண்டித்தும் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பயிற்சி மருத்துவா்கள் முழு வேலைநிறுத்தம் செய்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்ட பயிற்சி மருத்துவப் பிரதிநிதிகளுடன் சிதம்பரம் உதவி ஆட்சியா் எல்.மதுபாலன், பல்கலை. பதிவாளா் ஆா்.ஞானதேவன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக் கண்காணிப்பாளா் ரமேஷ் ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தி, கோரிக்கைகளை அரசுக்குப் பரிந்துரை செய்வதாகக் கூறினா்.
Advertisement
இதையடுத்து, வெள்ளிக்கிழமை பிற்பகலில் போராட்டத்தை முடித்துக் கொண்டனா். கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிடில், சனிக்கிழமை முதல் வேலைநிறுத்தமும், போராட்டமும் தொடரும் என பயிற்சி மருத்துவா்கள் தெரிவித்தனா்.