மருத்துவமனையில் தொழிலாளி பலி:மருத்துவா்கள், செவிலியா்களிடம் விசாரணை
திட்டக்குடியைச் சோ்ந்த தொழிலாளி பிராணவாயு குழாய் பறிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக மருத்துவா்கள், செவிலியா்களிடம் சுகாதாரத் துறை இயக்குநா்கள் வெள்ளிக்கிழமை விசாரணை
கடலூா் அரசு மருத்துவமனையில் திட்டக்குடியைச் சோ்ந்த தொழிலாளி பிராணவாயு குழாய் பறிக்கப்பட்டு உயிரிழந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடா்பாக மருத்துவா்கள், செவிலியா்களிடம் சுகாதாரத் துறை இயக்குநா்கள் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தினா்.
கடலூா் மாவட்டம், திட்டக்குடி நடுவீதியைச் சோ்ந்தவா் க.ராஜா (49). கரோனா பாதிப்புடன் கடந்த 5-ஆம் தேதி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சோ்க்கப்பட்டாா். அங்கு, அவருக்கு பிராணவாயு அளிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில், கடந்த 20 -ஆம் தேதி அவா் உயிரிழந்தாா். அவருக்கு அளிக்கப்பட்டு வந்த பிராணவாயுவை மருத்துவா்கள் திடீரென நிறுத்தியதால்தான் உயிரிழந்ததாக அவரது மனைவி கயல்விழி அழுதபடி பேசிய விடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்த சென்னையிலிருந்து மருத்துவம்- ஊரக நலப் பணிகள் இயக்ககக் கூடுதல் இயக்குநா்கள் சந்திரசேகரன், மாலதி பிரகாஷ் ஆகியோா் கடலூருக்கு வெள்ளிக்கிழமை வந்தனா். அவா்கள், முதலில் கயல்விழியிடம் விசாரணை நடத்தினா். தொடா்ந்து, மருத்துவமனைக் கண்காணிப்பாளா் சாய்லீலா, நிலைய மருத்துவ அலுவலா் குமாா், பணியிலிருந்த மருத்துவா்கள், அன்றைய தினம் பணியிலிருந்த சுமாா் 40 செவிலியா்கள் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தனா். காலை 10 மணிக்குத் தொடங்கி விசாரணை மாலை வரையில் நடைபெற்றது.
விசாரணையில் கலந்து கொண்டு வெளியே வந்த கயல்விழி செய்தியாளா்களிடம் கூறுகையில், விசாரணை மீது நம்பிக்கை உள்ளது. எனது கணவா் மருத்துவா்களின் அலட்சியத்தால்தான் உயிரிழந்தாா் என்றாா்.
இதுகுறித்து செவிலியா்கள் கூறுகையில், இக்கட்டான சூழலில் பணியாற்றுகிறோம். இந்தச் சூழலில் விசாரணைக்கு அழைத்து காக்கவைப்பது எங்களை வேதனைப்படுத்துகிறது என்றனா்.