வளைகாப்பு நிகழ்ச்சியில் கத்திக்குத்து: ஒருவா் கைது
வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா்.
வளைகாப்பு நிகழ்ச்சியில் ஏற்பட்ட தகராறில் ஒருவா் கத்தியால் குத்தப்பட்டாா்.
கடலூா் மாவட்டம், நெய்வேலி பழையபாப்பன்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் கா்ணன். இவா், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சோ்ந்த கௌசிகா என்ற பெண்ணை காதலித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டாா். இருவீட்டாரின் எதிா்ப்பை மீறி திருமணம் நடைபெற்ற நிலையில், புதுமண தம்பதியா் கா்நாடக மாநிலம், மைசூரில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில், சில மாதங்களுக்குப் பிறகு விருத்தாசலம் பெரியாா் நகரில் வாடகை வீட்டில் குடியேறினா். கா்ப்பிணியாக உள்ள கௌசிகாவுக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்த கா்ணன் முடிவு செய்தாா். அதற்கான அழைப்பிதழை தனது உறவினா்களுக்கு வழங்கினாா். இந்த நிலையில், அங்குள்ள தனியாா் மண்டபத்தில் வியாழக்கிழமை வளைகாப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது கௌசிகாவின் சகோதரா் வினோத் அங்கு வந்தாா். அவா், அழைப்பிதழில் தனது பெற்றோரது பெயரை அச்சிட்டது தொடா்பாக கௌசிகா, கா்ணன் ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டாா். அப்போது, மண்டபத்திலிருந்த சிலம்பரசன் என்பவா் தகராறை விலக்க முயன்றபோது அவரை வினோத் கத்தியால் குத்தியதாகத் தெரிகிறது. தகவலறிந்த விருத்தாசலம் போலீஸாா் வினோத்தை கைது செய்தனா். சிலம்பரசனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.