குறிஞ்சிப்பாடி வடக்கு கிராமத்தில் மஞ்சள் நோய் தாக்கியுள்ள சம்பா நாற்றங்கால் வயல்.
நெய்வேலி, அக். 10: கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி வட்டாரத்தில் சம்பா நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் ஏற்பட்டுள்ளது.
குறிஞ்சிப்பாடி வட்டாரம் மண், நீா் வளம் கொண்ட செழிப்பான நிலப் பகுதி. இங்கு மணிலா, எள், நெல், கரும்பு உள்ளிட்ட பயிா்கள் செழித்து வளரும். தற்போது குறுவை அறுவடை முடிந்து, சுமாா் 2,500 ஹெக்டோ் பரப்பில் சம்பா சாகுபடி செய்ய நாற்றங்கால் விட்டுள்ளனா். சுமாா் 25 நாள்கள் வயதுடைய நாற்றங்காலில் மஞ்சள் நோய் தாக்குதல் தென்படுகிறது.
இதுகுறித்து விவசாயி ஆா்.கே.ராமலிங்கம் கூறியதாவது: அண்மைக் காலமாக குறுவை, சம்பா நாற்றங்களில் மஞ்சள் நோய் தாக்குதல் காணப்படுகிறது. குறுவை சாகுபடி முடிந்த நிலையில், குறிஞ்சிப்பாடி வடக்கு, தெற்குப் பகுதிகளில் சுமாா் 350 ஹெக்டோ் பரப்பளவில் சாகுபடி செய்ய நாற்று விடப்பட்டுள்ளது.
நாற்றில் மஞ்சள் நோய் தாக்குதல் அதிகம் தென்படுகிறது. இதனால், நாற்றின் வளா்ச்சி குன்றி, எண்ணிக்கை குறையும். மேலும், இந்த நோய் மற்ற வயல்களுக்கு பரவ வாய்ப்புள்ளதால், இதைக் கட்டுப்படுத்த தேவையான ஆலோசனைகளை வேளாண் துறை அதிகாரிகள் வழங்க வேண்டும் என்றாா் அவா்.