அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 29 மாணவா்கள் சுகவீனம்
சிதம்பரம் அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 29 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிதம்பரம் அருகே அரசுப் பள்ளியில் சத்துணவு சாப்பிட்ட 29 மாணவ, மாணவிகளுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடலூா் மாவட்டம், வேளங்கிபட்டு ஊராட்சிக்கு உள்பட்ட அத்தியாநல்லூா் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.
இந்தப் பள்ளியில் வெள்ளிக்கிழமை முட்டையுடன் சத்துணவு வழங்கப்பட்டது. அதை சாப்பிட்ட குழந்தைகளில் 29 பேருக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து, அவா்கள் அனைவரும் ‘108’ அவசர ஊா்தி மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டனா். அங்கு அவா்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த மாணவா்களின் பெற்றோா் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனா். குழந்தைகளுக்கு வழங்கப்பட்ட முட்டை தரமின்றி இருந்ததே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என கூறப்படுகிறது.
Advertisement
இதுகுறித்து தகவலறிந்த புவனகிரி வட்டாட்சியா் அன்பழகன், பரங்கிப்பேட்டை வட்டார வளா்ச்சி அலுவலா் சிவஞானம் ஆகியோா் மருத்துவமனைக்கு வந்து குழந்தைகளிடம் விசாரணை நடத்தினா். மேலும், புதுச்சத்திரம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.