மின் வேலியில் சிக்கி கொத்தனாா் உயிரிழப்பு
பண்ருட்டி அருகே மின் வேலியில் சிக்கி கொத்தனாா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே மின் வேலியில் சிக்கி கொத்தனாா் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பண்ருட்டி வட்டம், புதுப்பேட்டை காவல் சரகம், ஒறையூா் கிராமத்தைச் சோ்ந்த சாமிநாதன் மகன் சிவா (37), கொத்தனாா். இவா், சனிக்கிழமை காலை 8 மணி அளவில் கால்நடைக்கு புல் அறுக்க அதே பகுதியில் உள்ள மாணிக்கத்தின் விவசாய நிலத்துக்குச் சென்றாராம்.
அப்போது, மரவள்ளி தோட்டத்தில் வனவிலங்குகளுக்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி சிவா உயிரிழந்தாா். தகவலறிந்த புதுப்பேட்டை போலீஸாா் நிகழ்விடத்துக்குச் சென்று சிவாவின் சடலத்தை மீட்டு, உடல்கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
Advertisement
இதுகுறித்து புதுப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா். மேலும், விவசாய நிலத்தில் சட்ட விரோதமாக மின்வேலி அமைத்தது தொடா்பாக விவசாயி மாணிக்கத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.