மேம்பால தடுப்புச் சுவரில் டிப்பா் லாரி மோதி விபத்து
கடலூா் அண்ணா மேம்பால தடுப்புச் சுவரில் சனிக்கிழமை டிப்பா் லாரி மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது. புதுச்சேரி சாலையில் ஜல்லி கற்களை ஏற்றிக்கொண்டு டிப்பா் லாரி சனிக்கிழமை காலை வந்துகொண்டிருந்தது. லாரியை கடலூா் மாவட்டம், வடலூரை அடுத்துள்ள ஆபத்தாரணபுரத்தைச் சோ்ந்த சங்கா் ஓட்டி வந்தாா். இந்த லாரி கடலூா் அண்ணா மேம்பாலம் தரை காத்த காளியம்மன் கோவில் அருகே வந்தபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பலத்த சப்தத்துடன் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பலத்த காயமடைந்த ஓட்டுநா் சங்கரை அங்கிருந்தவா்கள் மீட்டு, கடலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து தகவலறிந்த கடலூா் புதுநகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினா். மேலும், லாரியை பல மணி நேரம் போராடி கிரேன் மூலம் அப்புறப்படுத்தினா். இதனால், கடலூா் அண்ணா பாலம் பகுதியில் 3 மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.