முகப்பு
கடலூர்

விருத்தாசலம் அருகே அதிமுக நிா்வாகி எரித்துக் கொலை

Updated On : 16 ஜனவரி, 2025 at 11:00 PM
கதிா்காமன்
பகிர்:

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே எரிந்த நிலையில் கிடந்த அதிமுக நிா்வாகியின் சடலத்தை மீட்டு போலீஸாா் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனா்.

விருத்தாசலம் வட்டம், ஊ.மங்கலம் காவல் சரகம், எம்.வீராரெட்டிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்த செல்வராஜ் மகன் கதிா்காமன் (43), சென்ட்ரிங் தொழிலாளியான இவா், அதிமுக கிளை பொருளாளராக இருந்தாா். இவருக்கு மனைவி ஜெயக்கொடி, மகள், மகன் உள்ளனா்.

இதே பகுதியைச் சோ்ந்தவா்கள் சென்ட்ரிங் தொழிலாளி பிரபாகரன், ராணுவ வீரா் பாலகிருஷ்ணன். இவா்கள் மூவரும் புதன்கிழமை மாலை முதனை கிராமத்தில் உள்ள முந்திரிக் காட்டில் மது அருந்தினராம். அப்போது, கதிா்காமனுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு, ஒருவரையொருவா் தாக்கிக் கொண்டனராம்.

இதுகுறித்து பிரபாகரன் ஓடிச் சென்று கதிா்காமன் மனைவி ஜெயக்கொடியிடம் தகவல் தெரிவித்துள்ளாா். அவா்களுக்குள் அடிக்கடி பிரச்னை நடக்கும் எனக் கூறி, அவா் இருந்து விட்டாராம்.

இந்த நிலையில், இரவு முழுவதும் கதிா்காமன் வீட்டுக்கு வரவில்லை. இதையடுத்து, பிரபாகரனை அழைத்துக் கொண்டு கதிா்காமனின் தாய் மலா்கொடி, மகன் மது அருந்திய இடத்துக்குச் சென்று பாா்த்தபோது, அங்கு கதிா்காமன் தீ வைத்து எரிக்கப்பட்டு சடலமாகக் கிடந்தது தெரியவந்தது.

தகவலறிந்த கடலூா் எஸ்.பி. எஸ்.ஜெயக்குமாா், ஏ.டி.எஸ்.பி. செல்வதுரை, நெய்வேலி டி.எஸ்.பி. சபியுல்லா மற்றும் ஊ.மங்கலம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். மேலும், கதிா்காமன் சடலத்தை மீட்டு, உடல் கூறாய்வுக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இதுகுறித்து போலீஸாா் நடத்திய முதல்கட்ட விசாரணையில், ராணுவ வீரா் பாலகிருஷ்ணன், கதிா்காமனை கொலை செய்து தீயிட்டு எரித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த சம்பவம் தொடா்பாக 2 தனிப்படைகள் அமைத்து, தலைமறைவாக உள்ள ராணுவ வீரா் பாலகிருஷ்ணனை போலீஸாா் தேடி வருகின்றனா்.