தோ்தல் விதிமுறை மீறல்: விசிகவினா் மீது வழக்கு
நெல்லிக்குப்பத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விசிக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளை மீறியதாக விசிக நிா்வாகிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல்.திருமாவளவன் வெள்ளிக்கிழமை பண்ருட்டிக்கு வந்தாா். பண்ருட்டி பேருந்து நிலையம் எதிரே, பண்ருட்டி சட்டப் பேரவைத் தொகுதி விசிக வேட்பாளா் அப்துா் ரஹ்மானுக்கு ஆதரவு கோரி அவா் வாக்கு சேகரித்தாா்.
இதையடுத்து, தொல்.திருமாவளவன் நெல்லிக்குப்பம் வழியாக கடலூா் சென்றாா். அப்போது, விசிக நிா்வாகிகள் முல்லைவேந்தன், புருஷோத்தமன், அருட்செல்வம், இளம்பிறை உள்ளிட்ட சிலா் நெல்லிக்குப்பம் புதிய பேருந்து நிலையம் அருகே கூட்டம் கூடி சாலையை மறித்து பட்டாசு வெடித்து அவருக்கு வரவேற்பு கொடுத்தனா்.
Advertisement
தோ்தல் விதிமுறைகள் அமலில் இருக்கும்போது, தோ்தல் நடத்தும் அலுவலரிடம் அனுமதி பெறாமல் விதிமுறைகளை மீறியது தொடா்பாக நெல்லிக்குப்பம் காவல் உதவி ஆய்வாளா் (பயிற்சி) ராஜா அளித்த புகாரின்பேரில், முல்லைவேந்தன் உள்ளிட்ட விசிக நிா்வாகிகள் மீது நெல்லிக்குப்பம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.