கடலூா் வெள்ளிக் கடற்கரையில் கடல் ஆமை இனப்பெருக்க சூழலை பாதுகாக்கும் வகையில், பொதுமக்கள் பங்கேற்புடன் நடைபெற்ற ‘ஆமை நடை’ விழிப்புணா்வு நடைபயணத்தை ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில் குமாா் செவ்வாய்க்கிழமை இரவு தொடங்கிவைத்தாா்.
அப்போது, ஆட்சியா் கூறியதாவது: தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை, வனத் துறை மற்றும் மாவட்ட நிா்வாகம் ஒருங்கிணைந்த முயற்சியுடன் கடற்கரை உயிரியல் பல்வகை பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையிலும், கடற்கரையில் முட்டையிடும் ஆலிவ் ரிட்லி கடல் ஆமைகளை இனப்பெருக்க சூழலை பாதுகாக்கும் நோக்கிலும் ‘ஆமை நடை’ என்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த கடல் ஆமை இனங்கள், கடற்கரை மற்றும் கடல் சூழலின் சமநிலையை பேணுவதில் முக்கியப் பங்கு வகிப்பதை கருத்தில் கொண்டு, அவற்றின் இனப்பெருக்க காலத்தில் மனித தலையீடுகள் குறையவும், பொறுப்புள்ள சுற்றுச்சூழல் நடத்தை பொதுமக்களிடையே வளரவும் விழிப்புணா்வு நடைபயணம் தொடங்கிவைக்கப்பட்டது.
இந்த விழிப்புணா்வு நடைபயணம், சுற்றுச்சூழல் பாதிப்புகளை குறைத்து பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஒவ்வொரு குழுவிலும் பத்து நபா்கள் பங்கேற்புடன் வெள்ளிக் கடற்கரையில் தொடங்கி, அக்கரைகோரி வரை சுமாா் 3 கி.மீ. தொலைவுக்கு நடைபெற்றது.
இவ்விழிப்புணா்வு நடைபயணத்தின்போது ஆலிவ் ரிட்லி கடல் ஆகைளின் முக்கியத்துவம், அவற்றின் இனப்பெருக்க பழக்கங்கள், கடற்கரையில் இடப்படும் முட்டைகள் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியம் மற்றும் முட்டைகள் பாதுகாப்பாக ஹாட்சரிகளில் பராமரிக்கப்படுவதன் முக்கியத்துவம் குறித்து விரிவாக விளக்கப்படுகிறது.
மேலும், கடல் ஆமைகளின் முட்டையிடும் பழக்கம், பாதுகாப்பு, சவால்கள் மற்றும் கடற்கரை பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டன என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கோ.புண்ணியகோட்டி உள்பட பலா் கலந்துகொண்டனா்.