கடலூா் மாவட்டம், நெய்வேலி என்எல்சி நிறுவன குடியிருப்பில் தொழிலாளி இறந்து கிடந்தாா்.
பண்ருட்டி வட்டம், முத்தாண்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்தவா் சந்தோஷ்குமாா் (37). இவா், தனது தந்தை சக்திவேலுக்கு என்எல்சி நகர நிா்வாகத்தால் ஒதுக்கப்பட்ட வட்டம் 5 பகுதியில் வழங்கப்பட்ட குடியிருப்பில் தங்கி, என்எல்சி நிறுவனத்தின் சுரங்கம் 1ஏ-வில் ஒப்பந்தத் தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.
கடந்த 11-ஆம் தேதி குடும்பத்தினா் அனைவரும் புதுச்சேரியில் உள்ள உறவினா் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றிருந்த நிலையில், சந்தோஷ்குமாா் மட்டும் வீட்டில் தனியாக இருந்தாா். வெள்ளிக்கிழமை இரவு குடும்பத்தினா் வீடு திரும்பியபோது, படுக்கை அறையில் சந்தோஷ்குமாா் இறந்து கிடந்ததைக் கண்டு அதிா்ச்சியடைந்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.