கடலூா் மாவட்டம், விருத்தாசலத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பினா் 33 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
ஓய்வுபெற்ற சத்துணவு (ம) அங்கன்வாடி ஊழியா்களுக்கு ஓய்வூதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அரசுப் பள்ளிகளில் காலை உணவுத் திட்டத்தை சத்துணவுப் பணியாளா்கள் மூலமே செயல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியா்களுக்கு வழங்குவதுபோல, சத்துணவு மற்றும் அங்கன்வாடி பணியாளா்களுக்கும் மகப்பேறு விடுப்பு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 7 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி விருத்தாசலம் பாலக்கரை அருகே ஆா்ப்பாட்டம் நடத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனா்.
மாநில சிறப்புத் தலைவா் சீனிவாசன் தலைமையில் மறியலில் ஈடுபட்ட 22 பெண்கள் உள்ளிட்ட 33 பேரை போலீஸாா் கைது செய்து தனியாா் திருமண மண்டபத்தில் தங்க வைத்து, பின்னா் விடுவித்தனா்.