விருத்தாசலம் வட்டம், கம்மாபுரம் ஒன்றியம் ஊமங்கலம் கிராமத்தில் உள்ள மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க கோரி மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் விருத்தாசலம் கோட்டாட்சியா் அலுவலகத்தில் மனு கொடுக்கும் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
போராட்டத்திற்கு ஓன்றியச் செயலா் ஆா்.கலைச்செல்வன் தலைமை வகித்தாா். இதில் பங்கேற்பதற்காக பாலக்கரையில் இருந்து பேரணியாக வந்த போது காவல்துறையினா் போராட்டக்குழுவினரை தொடா்ந்து செல்ல அனுமதி மறுத்தனா்.
ஆனால் அதனையும் மீறி சென்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்ட பின்பு விருத்தாசலம் கோட்டாட்சியரின் உதவியாளா் அந்தோணியிடம் 500- க்கும் மேற்பட்ட மனுக்கள் அளிக்கப்பட்டது.
போராட்டத்தில் மாவட்டச் செயலா் ஜி.மாதவன், மாநிலக் குழு உறுப்பினா் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாவட்டக்குழு உறுப்பினா் டி.ஜெயராமன், பழங்குடி மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலா் என்.எஸ்.அசோகன், ஒன்றிய குழுவைச் சோ்ந்த கே.அன்புச்செல்வி, யு.சுந்தரவடிவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.