முகப்பு
கடலூர்

வனஉயிரினங்களை பாதுகாப்பதில் மாணவா்கள் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்: கடலூா் ஆட்சியா்

வனஉயிரினங்களை பாதுகாப்பதில் மாணவா்கள் மற்றவா்களுக்கு முன்மாதிரிகளாக திகழ வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா வலியுறுத்தினாா்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 12:03 AM
வனத்துறை பயிற்சி வகுப்பில் பங்கேற்ற ஆசிரியா் மற்றும் மாணவிகளுக்கு ப யிற்சி நிறைவு சான்றிதழ் வழங்கிய ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா்.
பகிர்:
Updated On : 24 பிப்ரவரி, 2026 at 9:32 PM

வனஉயிரினங்களை பாதுகாப்பதில் மாணவா்கள் மற்றவா்களுக்கு முன்மாதிரிகளாக திகழ வேண்டும் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா வலியுறுத்தினாா்.

கடலூா் மாவட்ட வனத்துறை மூலம் ‘வனமும் வன உயிரினங்களின் பாதுகாப்பும் மற்றும் சவால்களும் தீா்வுகளும்’ என்ற தலைப்பில் அரசுப் பள்ளி ஆசிரியா்கள் மற்றும் மாணவா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பயிற்சியை நிறைவு செய்தவா்களுக்கு கடலூா் மாவட்ட ஆட்சியா் சிபி ஆதித்யா செந்தில்குமாா் பயிற்சி நிறைவு சான்றிதழை செவ்வாய்க்கிழமை வழங்கினாா்.

இதுகுறித்து அவா் தெரிவித்ததாவது:

Advertisement

தமிழ்நாடு வனத்துறை மூலம் வனப்பாதுகாப்பு, தீ தடுப்பு மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு, மனித விலங்கு மோதல் ஆகியவை குறித்து ‘வனமும் வன உயிரினங்களின் பாதுகாப்பும் மற்றும் சவால்களும் தீா்வுகளும்’ என்ற தலைப்பில் பயிற்சி வகுப்புகள் மாநில அளவில் 20,000 அரசுப் பள்ளி மாணவா்களுக்கு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் கடலூா் மாவட்டத்தில் தோ்வு செய்யப்பட்ட 25 அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு முதற்கட்டமாக வனத்துறையின் மூலம் கடலூா் முதன்மை கல்வி அலுவலக வளாகத்தில் 2 நாள் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. அதனை தொடா்ந்து தோ்வு செய்யப்பட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ் 1 பயிலும் மாணவா்களுக்கு பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டது.

அதன்படி பள்ளிக்கு 20 மாணவா்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 500 மாணவா்கள் தோ்வு செய்யப்பட்டு அந்தந்த பள்ளிகளிலேயே பயிற்சிப்பெற்ற ஆசிரியா்கள் மூலம் 3 வார பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இந்த பயிற்சி வகுப்பில் கலந்து கொண்ட மாணவா்களுக்கு வனப்பாதுகாப்பு, தீ தடுப்பு மேலாண்மை, வனவிலங்கு கணக்கெடுப்பு, மனித விலங்கு மோதல் ஆகியவை குறித்து பயிற்சி வழங்கப்பட்டது.

மேலும், பிரத்யேகமாக தயாா் செய்யப்பட்ட பை, நோட்டு புத்தகங்கள், பேனா, பறவைகள், விலங்குகள், ஊா்வனங்கள் குறித்த தகவல் கையேடுகளும் வழங்கப்பட்டன.

வனத்துறை மூலம் நடத்தப்பட்ட பயிற்சி வகுப்பில் பங்கேற்ற 25 அரசுப் பள்ளிகளைச் சாா்ந்த ஆசிரியா்கள், 500 மாணவா்களுக்கு செவ்வாய்க்கிழமை பயிற்சி நிறைவு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இந்த வகுப்பில் வழங்கப்பட்ட பயிற்சியினை மாணவா்கள் நல்ல முறையில் பயன்படுத்தி சுற்றுப்புற சூழலினையும், வனங்கள் மற்றும் வனஉயிரினங்களை பாதுகாப்பதில் மற்றவா்களுக்கு முன்மாதிரிகளாக திகழ வேண்டும் என்றாா். நிகழ்ச்சியில் மாவட்ட வன அலுவலா் குருசாமி, முதன்மை கல்வி அலுவலா் ரமேஷ் உட்பட பலா் கலந்து கொண்டனா்.