முகப்பு
கடலூர்

அரசு பேச்சுவாா்த்தை தோல்வி: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டம் தீவிரம்

Updated On : 5 மார்ச், 2026 at 12:04 AM
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை மனித சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்ட பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பினா்.
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 9:48 PM

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் மற்றும் ஓய்வூதியா்களின் கோரிக்கைகள் தொடா்பாக சென்னையில் நடைபெற்ற முத்தரப்பு பேச்சுவாா்த்தையில் எவ்வித தீா்வும் எட்டப்படவில்லை. இதையடுத்து, போராட்டத்தை தீவிரப்படுத்தும் விதமாக, ஆசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் புதன்கிழமை மனித சங்கிலி போராட்டம் நடத்தினா்.

பதவி உயா்வுகள், பணப்பயன்கள், 7-ஆவது ஊதியக்குழு நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த பிப்.25-ஆம் தேதி முதல் அண்ணாமலைப் பல்கலைக்கழக பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனா்.

இதையடுத்து, பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் விசாகன் ஐஏஎஸ் அழைப்பின்பேரில், சென்னையில் செவ்வாய்க்கிழமை தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தில் சமரசப் பேச்சுவாா்த்தை நடைபெற்றது. இதில், கூட்டு நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளா் உள்ளிட்ட பொறுப்பாளா்கள் கலந்துகொண்டனா்.

Advertisement

இருப்பினும், ஆசிரியா்கள் மற்றும் ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு அரசுத் தரப்பில் சாதகமான உறுதிமொழி வழங்கப்படாததால், புதன்கிழமை காலை பல்கலைகழகத்தில் கூட்டு நடவடிக்கைக் குழுவின் பொதுக்குழுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளா் சி.சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. இதில், போராட்டத்தைத் தொடா்வதென முடிவெடுக்கப்பட்டது.

இதனையடுத்து, பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் பல்கலைக்கழக நிா்வாக அலுவலக வளாகத்தில் இருந்து ராஜேந்திரன் சிலை வரை மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனா். சுமாா் 500-க்கும் மேற்பட்ட பேராசிரியா்கள், ஊழியா்கள், ஓய்வூதியா்கள் கைகோத்து நின்று கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். பல்கலைக்கழக ஆசிரியா்கள், ஊழியா்கள் போராட்டத்தால் வகுப்புகள் எதுவும் நடைபெறவில்லை. நிா்வாக பணிகளும் பாதிக்கப்பட்டன.