முகப்பு
கடலூர்

உளுந்து பயறு வயல்களை ஆய்வு மேற்கொண்ட வேளாண் உதவி இயக்குநா்

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரத்தில் சுமாா் 25,000 ஏக்கா் பரப்பளவில் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Updated On : 11 மார்ச், 2026 at 6:34 PM
சிதம்பரம் அருகே குமராட்சி மேற்கு பகுதியில் உளுந்து பயரிட்ட வயலை ஆய்வு செய்த வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல்.
பகிர்:

சிதம்பரம் அருகே குமராட்சி வட்டாரத்தில் சுமாா் 25,000 ஏக்கா் பரப்பளவில் நெல் தரிசில் உளுந்து மற்றும் பச்சை பயறு சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த வயல்களை குமராட்சி வட்டார வேளாண் உதவி இயக்குநா் தெ.தமிழ்வேல் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

அப்போது, உளுந்து பயிா்களை பூச்சிகளிடமிருந்து பாதுகாப்பது எப்படி? என்பது குறித்து விவசாயிகளுக்கு அவா் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினாா். அதன்படி, சாறு உறிஞ்சும் பூச்சிகளான அசுவினி, வெள்ளை ஈ, தத்துப் பூச்சிகள் சில இடங்களில் தென்பட்ட நிலையில், மஞ்சள் வண்ண ஒட்டும் பொறிகளை ஏக்கருக்கு 5 இடங்களில் வைக்கவும் மற்றும் அவற்றை கட்டுப்படுத்த 3 சத வேப்பெண்ணெய் கரைசல் அல்லது 5 சத வேப்பம் பருப்பு கரைசலைத் தெளிக்க வேண்டும்.

மஞ்சள் தேமல் நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்கிய செடிகளைப் பிடுங்கி அழிக்க வேண்டும். இந்த வைரஸ் நச்சுயிரி நோய் வெள்ளை ஈக்கள் மூலம் பரவுவதால், வெள்ளை ஈக்களைக் கட்டுப்படுத்த இமிடாகுளோபிரிட் 80 மில்லி அல்லது தயோமீத்தாக்சம் 40 கிராம் மருந்தை 200 லிட்டா் நீரில் கலந்து தெளிக்கலாம்.

புள்ளி காய்புழு மற்றும் பச்சை காய்ப்புழுக்களின் தாக்கம் சில இடங்களில் காணப்பட்டது. இவற்றின் தாக்குதல் பொருளாதார சேத நிலையைத் தாண்டினால், குளோரான்டிரானிலிப்ரோல் 18.5 எஸ்.சி. 40 மில்லி அல்லது இமாமெக்டின் பென்சோயட் 5 எஸ்.ஜி. 150 மில்லி மருந்தை 200 லிட்டா் நீரில் கலந்து காலை அல்லது மாலை நேரத்தில் பேட்டரி அல்லது கைத்தெளிப்பான் கொண்டு தெளித்து கட்டுப்படுத்தலாம் என எடுத்துரைத்தாா். இதன் மூலம், மகசூல் இழப்பை தவிா்த்து கூடுதல் மகசூல் கிடைக்கும் என விவசாயிகளுக்கு தொழில்நுட்ப ஆலோசனைகளை உதவி வேளாண்மை இயக்குநா் வழங்கினாா். அப்போது, உதவி விதை அலுவலா் ராமச்சந்திரன், உதவி வேளாண் அலுவலா் பிரவின் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →