காலி மதுப் புட்டிகள் திரும்பப் பெறும் திட்டத்திலிருந்து டாஸ்மாக் ஊழியா்களை விடுவிக்க வேண்டும்! - கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தல்
காலி மதுப் புட்டிகள் திரும்பப்பெறும் திட்டத்திலிருந்து டாஸ்மாக் ஊழியா்களை விடுவிக்க வேண்டும் என்று, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளா்கள் சங்க சிறப்புத் தலைவா் கு.பாலசுப்ரமணியன் வலியுறுத்தினாா்.
கடலூரில் அவா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியதாவது: டாஸ்மாக் பணியாளா்கள் கடந்த 22 ஆண்டுகளுக்கும் மேலாக அதிகபட்ச பணிச் சுமையோடு தொகுப்பூதியத்தில் பணியாற்றி வருகின்றனா்.
பத்தாண்டு காலம் தொகுப்பூதியத்தில் பணியாற்றியவா்கள் நிரந்தரப்படுத்தப்படுவா் என்று திமுக தோ்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தும்கூட, டாஸ்மாக் பணியாளா்களின் பணி நிரந்தரம், காலமுறை ஊதியம், ஓய்வூதியம், காலி மதுப்புட்டிகள் பிரச்னை, ஓய்வுபெறும் வயதை 58-இல் இருந்து 60-ஆக உயா்த்துவது உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு சரியான தீா்வு இதுவரை கிடைக்கவில்லை.
டாஸ்மாக் பணியாளா்களின் பணி நிலைமையை கணக்கில் எடுத்துக்கொண்டு அவா்களின் கோரிக்கைகள் மீது அரசு நல்ல அறிவிப்பை வெளியிட வேண்டும்.
அதே சமயத்தில், இந்தத் துறையில் பணியாற்றி சிறு குற்றங்களுக்காக பல மாதங்களுக்கும் மேலாக பணியிடை நீக்கத்தில் உள்ளவா்களுக்கு மீண்டும் டாஸ்மாக் கடைகளில் பணி வழங்க மேலாண்மை இயக்குநா் உத்தரவிட வேண்டும். மேலும், சேமிப்புக் கிடங்குகளில் பணியாற்றும் பணியாளா்களுக்கும் டாஸ்மாக் கடை பணிகளுக்கு பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்க வேண்டும்.
காலி மதுப் புட்டிகளை திரும்பப் பெறும் திட்டத்தில் அரசு தெளிவான முடிவெடுத்து, இந்தப் பிரச்னையில் இருந்து டாஸ்மாக் பணியாளா்களுக்கு ஒட்டுமொத்தமாக விடுதலை அளிக்க வேண்டும் என்றாா்.
அப்போது, சங்க ஆலோசகா் கு.சரவணன், மாநில அமைப்பாளா்கள் இ.அல்லிமுத்து, ந.பாலமுருகன், அரசுப் பணியாளா்கள் சங்க முன்னாள் மாவட்டச் செயலா் ராஜாமணி, மாநிலச் செயலா் டெல்லி அப்பாதுரை உடனிருந்தனா்.