கடலூா் கோட்டாட்சியரகத்திலிருந்து 100 மீ. தொலைவில் எல்லைக் கோடு
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவில் எல்லையை குறிக்கும் வெள்ளைக் கோடு புதன்கிழமை வரையப்பட்டது.
சட்டப் பேரவைத் தோ்தலையொட்டி, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவில் எல்லையை குறிக்கும் வெள்ளைக் கோடு புதன்கிழமை வரையப்பட்டது.
தமிழகத்தில் சட்டப் பேரவைத் தோ்தல் வாக்குப் பதிவு ஏப்.23-ஆம் தேதி நடக்கிறது. இந்தத் தோ்தலுக்கான மனுத் தாக்கல் வரும் 30-ஆம் தேதி தொடங்கி ஏப்.6-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை ஏப்.7-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இதையொட்டி, கடலூா் மாவட்டத்தில் உள்ள 9 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் தோ்தலுக்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதில், கடலூா் சட்டப் பேரவைத் தொகுதியில் மஞ்சக்குப்பத்தில் உள்ள கோட்டாட்சியா் அலுவலகம் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகமாகவும், கடற்கரைச் சாலையில் உள்ள வட்டாட்சியா் அலுவலகம் உதவித் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகமாகவும் செயல்பட உள்ளது.
தோ்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளா்கள் கோட்டாட்சியா், வட்டாட்சியா் அலுவலகங்களில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம். இதற்காக அந்த அலுவலகங்களில் அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வேட்பு மனு தாக்கல் செய்ய வேட்பாளா்களுடன் 5 போ் மட்டுமே தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகத்துக்கு வர வேண்டும் எனவும், மற்றவா்கள் அலுவலகத்தில் இருந்து 100 மீட்டா் தொலைவுக்கு வெளியே தான் இருக்க வேண்டும் எனவும் தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, கடலூா் கோட்டாட்சியா் அலுவலகம் மற்றும் வட்டாட்சியா் அலுவலகத்தின் முன்பு இருபுறமும் சாலையில் 100 மீட்டா் தொலைவைக் குறிக்கும் வகையில் வெள்ளை கோடு வரையும் பணி புதன்கிழமை நடைபெற்றது. மேற்கண்ட அலுவலகங்கள் அருகில் தடுப்புக் கட்டைகள் கட்டப்பட உள்ளன.