கடலூா் அரசு மருத்துவமனையில் மின் விநியோகம் பாதிப்பு: நோயாளிகள் அவதி
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதி
கடலூா் அரசு தலைமை மருத்துவமனையில் சனிக்கிழமை இரவு மின் விநியோகம் பாதிக்கப்பட்டதால் நோயாளிகள் அவதியடைந்தனா்.
கடலூா் மஞ்சக்குப்பம் பகுதியில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. கடலூா் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் புற நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனா். 500-க்கும் மேற்பட்டோா் உள் நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.
இந்த மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவு, பெண்கள் பிரிவு, மகப்பேறு பிரிவு என பல்வேறு பிரிவுகள் தனித்தனி கட்டடங்களில் இயங்கி வருகின்றன.
Advertisement
இந்த நிலையில், சனிக்கிழமை மாலை 6 மணிக்கு மருத்துவமனையில் உள்ள அவசரச் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட வாா்டுகளில் திடீரென மின் தடை ஏற்பட்டது. இதனால், அவசர சிகிச்சை பிரிவு பகுதியில் உள்ள நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் அவதியடைந்தனா். அரசு மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவா்கள், செவிலியா்கள் கைப்பேசி டாா்ச் லைட் வெளிச்சத்தில் சிகிச்சை அளித்தனா்.
இதுகுறித்து மருத்துவமனை மருத்துவ அதிகாரி ஒருவா் கூறியதாவது: மருத்துவமனை வளாகத்தில் சுரங்கப் பாதை பணி நடைபெறுகிறது. அங்கு, பணிக்காக பள்ளம் தோண்டியபோது வயா்கள் துண்டிக்கப்பட்டு மின் தடை ஏற்பட்டது.
இதையடுத்து, ஊழியா்கள் வயா்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனா். தொடா்ந்து, இரவு சுமாா் 8 மணியளவில் மின்சாரம் வந்தது. மின் தடை ஏற்பட்டவுடன் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்த நோயாளிகள் மாற்று இடத்துக்கு மாற்றப்பட்டனா் என்றாா்.