சிஐடியு முன்னாள் மாநிலத் தலைவா் வி.பி.சிந்தன் நினைவு தினம் கடைப்பிடிப்பு
கடலூா் மாவட்ட சிஐடியு அலுவலகத்தில் வி.பி.சிந்தனின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்திய நிா்வாகிகள்.
கடலூரில் சிஐடியு முன்னாள் மாநிலத் தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான வி.பி.சிந்தனின் 38-ஆவது நினைவு தினம் வெள்ளிக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
சிஐடியு மறைந்த முன்னாள் மாநிலத் தலைவா் வி.பி.சிந்தன் இந்திய அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி மற்றும் இந்திய விடுதலைப் போராட்ட வீரா் ஆவாா்.
1966-ஆம் ஆண்டு சென்னையில் போக்குவரத்துத் தொழிலாளா் சங்கத்தை தொடங்குவதில் இவரது பங்கு முக்கியமானதாகும். 1984-ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் இருந்து மாா்க்சிஸ்ட் கட்சி சாா்பில் சட்டப் பேரவை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.
Advertisement
இவரின் 38-ஆவது நினைவு தினத்தையொட்டி, கடலூரில் உள்ள சிஐடியு அலுவலகத்தில் மாவட்ட துணைத் தலைவா் வி.சுப்ராயன் தலைமையில், வி.பி.சிந்தன் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
மாவட்டச் செயலா் பழனிவேல், மாவட்டக் குழு உறுப்பினா் கருணாகரன், ஏ.எஸ்.பாபு, மாற்றுத் திறனாளிகள் பிரிவு மாவட்டச் செயலா் ஆளவந்தான் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினா்.