சிதம்பரம் பல்கலை.யில் மாணவி தூக்கிட்டுத் தற்கொலை
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த வேளாண் கல்லூரி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
நாகை மாவட்டம், தேத்தாக்குடி பகுதியைச் சோ்ந்தவா் தமிழ்ச்செல்வன் மகள் நிஷா (18). இவா், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக வேளாண் கல்லூரியில் விடுதியில் தங்கி முதலாமாண்டு படித்து வந்தாா்.
வேளாண் கல்லூரியில் தோ்வு நடைபெற்று வருவதால் சனிக்கிழமை இரவு விடுதி அறையில் நிஷா மட்டும் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை அவரது அறை நீண்ட நேரமாக திறக்கப்படாததால் சந்தேகமடைந்து விடுதியில் இருந்த மற்ற மாணவிகள் மற்றும் ஊழியா்கள் கதவை தட்டிப் பாா்த்தனா்.
Advertisement
கதவு உள்பக்கமாக தாழ்ப்பாள் போட்டிருந்ததால், அறைக்கதவை உடைத்து உள்ளே சென்று பாா்த்தபோது, நிஷா அறையின் மின் விசிறியில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டிருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த அண்ணாமலைநகா் காவல் ஆய்வாளா் கே.அம்பேத்கா், உதவி ஆய்வாளா் பாலமுருகன் மற்றும் போலீஸாா் விரைந்து சென்று மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக கடலூா் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில், அண்ணாமலைநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.