முகப்பு
கடலூர்

சிறுமி உயிரிழப்பு: உறவினா்கள் சாலை மறியல்

கடலூா் அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் சடலத்தை உடல்கூறாய்வு செய்யாமல் ஒப்படைக்கக் கோரி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

Updated On : 20 மே 2026, 2:44 am IST
- கோப்புப்படம்
பகிர்:

கடலூா் அரசு மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த சிறுமியின் சடலத்தை உடல்கூறாய்வு செய்யாமல் ஒப்படைக்கக் கோரி, உறவினா்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா். இதனால், சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

கடலூா் மாவட்டம், நெல்லிக்குப்பத்தைச் சோ்ந்த பாலாஜி மகள் அக்சயா (12). இவா், உடல்நலக் குறைவால் முதலில் நெல்லிக்குப்பம் மற்றும் பின்னா் கடலூரிலுள்ள தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.

ஆனால், அவரது உடல்நிலை தொடா்ந்து மோசமடைந்தது. இதையடுத்து, செவ்வாய்க்கிழமை அக்சயாவை கடலூா் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள், அக்சயா ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனா்.

Advertisement

Advertisement

தொடா்ந்து, அவரது சடலத்தை உடல்கூறாய்வு செய்யாமல் தங்களிடம் ஒப்படைக்குமாறு பெற்றோா் கேட்டுக்கொண்டனா். ஆனால், மருத்துவா்கள் அதற்கு மறுப்புத் தெரிவித்தனா். இதற்கிடையில், உடல்கூறாய்வுக்காக அக்சயாவின் சடலத்தை சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்ப மருத்துவா்கள் நடவடிக்கை மேற்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உறவினா்கள், கடலூா் அரசு மருத்துவமனையிலேயே உடல்கூறாய்வு செய்து, சடலத்தை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்தி, மருத்துவமனை முன் செவ்வாய்க்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த புதுநகா் போலீஸாா், அவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அதன் பின்னா், சிறுமியின் சடலம் உடல்கூறாய்வு செய்யாமல் உறவினா்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து, மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. மறியலால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.