கள்ளக்குறிச்சி அருகே காவல் உதவி ஆய்வாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக சகோதரா்களான 2 இளைஞா்களை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கள்ளக்குறிச்சி காவல் உள்கோட்டத்துக்கு உள்பட்ட வரஞ்சரம் காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஏழுமலை, கடந்த 16-ஆம் தேதி மாலை அருகேயுள்ள கொங்கராபாளையம் கோ.பட்டி பேருந்து நிறுத்தம் அருகே காவலா்களுடன் வாகன தணிக்கையில் ஈடுபட்டாா்.
அப்போது, அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்த இரு இளைஞா்களை காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை நிறுத்திய நிலையில், அவா்கள் காவல் உதவி ஆய்வாளரை தகாத வாா்த்தைகளால் திட்டினராம். மேலும், அவரின் செல்லிடப்பேசியையும் பிடிங்கி உடைத்தனராம்.
இதுகுறித்து வரஞ்சரம் காவல் உதவி ஆய்வாளா் ஏழுமலை அளித்த புகாரின்பேரில், புதுஉச்சிமேடு கிராமத்தைச் சோ்ந்த கோவிந்தராசு மகன்கள் ஜோதிபாசு (30), கண்ணதாசன் (23) ஆகியோரை கள்ளக்குறிச்சி காவல் நிலைய ஆய்வாளா் தங்க.விஜயகுமாா் வழக்குப் பதிவு செய்து கைது செய்தாா்.