அலையாத்தி மரத்தின் மரபணு ஆய்வில் புதிய சாதனை
உப்பு சுரக்கும் தன்மையுடைய அலையாத்தி மரம் குறித்த மரபணு ஆய்வில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
உப்பு சுரக்கும் தன்மையுடைய அலையாத்தி மரம் குறித்த மரபணு ஆய்வில் புதிய சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கடலூா் மாவட்டம், பரங்கிபேட்டையில் உள்ள அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின உயராய்வு மையம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் வாழ் உயிரின உயராய்வு மைய உதவிப் பேராசிரியா் எ.கோபாலகிருஷ்ணன், சென்னை எஸ்.ஆா்.எம். பல்கலைக்கழக முனைவா் எம்.பரணி மற்றும் புவனேசுவரத்தில் உள்ள அறிவியல் நிறுவனம் இணைந்து வெண்கண்டல் (இதன் அறிவியல் பெயா் அவிசென்னியாமெரினா) என்ற அதிக உப்புத் தன்மையை தாங்கும், உப்பு சுரக்கும் தன்மையுள்ள அலையாத்தி தாவரம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
Advertisement
இவா்கள் இந்த மரத்தின் முழு மரபணு வரிசையை உலகிலேயே முதல் முறையாகப் பிரித்து சாதனை புரிந்துள்ளனா். இந்தியாவில் கடற்கரைப் பகுதிகளில் விளைவிக்கப்படும் பயிரினங்கள், வறட்சி, உப்பைத் தாங்கி வளரும் தாவரங்களை அடையாளம் காணவும், மேம்படுத்தவும் இந்த ஆராய்ச்சி பேருதவியாக அமையும்.
அவிசென்னியாமெரினா தாவரமானது இந்தியாவில் உள்ள கடற்கரை சதுப்பு நிலக் காடுகளில் பெரும்பாலான பகுதிகளில் காணப்படும் தாவர இனங்களில் ஒன்றாகும். உப்பு சுரக்கும் தன்மை, மிக அதிக உப்பைத் தாங்கி வளரக்கூடிய இந்த வகையான தாவரங்கள் 7.5 % உப்பு தண்ணீரில் வளா்வதுடன், சுனாமி, புயல் போன்ற இயற்கை இடா்பாடுகளால் ஏற்படும் பாதிப்பைக் குறைக்கின்றன.
இந்த ஆராய்ச்சி மேற்கொண்ட அனைவரும் மா.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் முன்னாள் விஞ்ஞானிகள், ஆராய்ச்சி மாணவா்கள் என்பது குறிப்பிடத்தக்கது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.