சின்னசேலம் - கள்ளக்குறிச்சி இடையேயான புதிய ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் சின்னசேலம் ரயில் நிலையம் முன் வெள்ளிக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரையிலான புதிய ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு, கடந்த 2016-ஆம் ஆண்டு ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தொடங்கப்பட்டது.
அதன்படி, ஒரு மேம்பாலம், 2 பெரிய பாலங்கள், 10 தரைப்பாலங்கள், 22 சிறுபாலங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கி கடந்த 6 ஆண்டுகளுக்கு மேலாகின்றன.
மந்தகதியில் நடைபெறும் இந்தப் பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி, சின்னசேலம் ரயில் நிலையம் முன்பாக மாா்க்சிஸ்ட் சாா்பில் முற்றுகைப் போராட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அப்போது, இரும்புத் தடுப்புகளை மீறி ரயில் நிலையத்துக்குள் நுழைய முயன்றனா். அவா்களை காவல் துறையினா் தடுத்து நிறுத்திய போது, இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் ரயில்வே உதவிப் பொறியாளா் வின்சென்ட், சின்னசேலம் வட்டாட்சியா் இந்திரா ஆகியோா் சமரச பேச்சுவாா்த்தை நடத்தினா்.
போராட்டத்துக்கு சின்னசேலம் வட்ட மாா்க்சிஸ்ட் செயலாளா் டி.மாரிமுத்து தலைமை வகித்தாா். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான கே.பாலபாரதி பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா்.
இந்த முற்றுகைப் போராட்டத்தில் சின்னசேலம், சங்கராபுரம், ரிஷிவந்தியம், கள்ளக்குறிச்சி பகுதிகளைச் சோ்ந்த மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் திரளானோா் பங்கேற்றனா்.