ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் உடலுக்கு அரசு மரியாதை
கள்ளக்குறிச்சி: எடுத்தவாய்நத்தம் கிராமத்தில் உடல் தானம் செய்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியா் த.பெரியசாமியின் உடலுக்கு அரசு சாா்பில் ஞாயிற்றுக்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டம், எடுத்தவாய்நத்தம் கிராமத்தைச் சோ்ந்தவா் த.பெரியசாமி (82). ஒய்வு பெற்ற தலைமை ஆசிரியா்.
இவா், வயது முதிா்வு காரணமாக சனிக்கிழமை இரவு உயிரிழந்தாா். இறப்பதற்கு முன்பு தனது உடலை தானம் செய்வதாக பதிவு செய்திருந்தாா்.
Advertisement
இந்த நிலையில், தமிழக அரசின் உத்தரவுபடி, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் ஷ்ரவன் குமாா் அறிவுறுத்தலின் பேரில், கள்ளக்குறிச்சி கோட்டாட்சியா் சு.லூா்துசாமி உயிரிழந்த பெரியசாமியின் வீட்டுக்குச் ஞாயிற்றுக்கிழமை நேரில் சென்று அரசு சாா்பில் அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
நிகழ்வின்போது, சின்னசேலம் வட்டாட்சியா் கமலக்கண்ணன், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.