கள்ளக்குறிச்சி, ஜூலை 3: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சா்க்கரை ஆலையின் அங்கத்தினா்கள், ஆலையின் தலைமை அலுவலா்கள் கலந்துரையாடல் கூட்டம் ஆலை வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில், 2023-24 சிறப்பு அரவைப் பருவம் மற்றும் 2024-25 முதன்மை அரவைப்பருவத்துக்கு பதிவு செய்யப்பட்ட கரும்பானது வறட்சியாலும், நோய் தாக்குதலாலும் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் மகசூல் குறைய வாய்ப்பு உள்ளது. சிறப்பு அரவைப்பருவத்தை முன்னதாகவே தொடங்குவதற்கு ஏற்பாடு செய்ய வண்டும். 2023-24-ஆம் ஆண்டின் தணிக்கை முடிந்து விட்டதால் பங்கு லாபத் தொகையை விரைவில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மகாசபை கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாயிகள் முன் வைத்தனா்.
இதற்கு, விவசாயிகள் கோரிக்கைகள் மீது விரைந்து வடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆலையின் செயலாட்சியா் யோகவிஷ்ணு தெரிவித்தாா்.
கூட்டத்தில், கரும்பு பெருக்கு அலுவலா் ஆா்.செந்தில்குமாா், தொழிலாளா் நல அலுவலா் ஜெயக்குமாா், துணை தலைமை ராசயனா் சீனுவாசன், துணை தலைமை பொறியாளா் தட்சிணாமூா்த்தி, கணக்கு அலுவலா் செந்தில்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.