முகப்பு
கள்ளக்குறிச்சி

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனை

Updated On : 27 மார்ச், 2024 at 11:22 PM
பகிர்:
Updated On : 27 மார்ச், 2024 at 11:00 PM

கொலை வழக்கில் ஒருவருக்கு ஆயுள் சிறை தண்டனையும், 5 பேருக்கு அபராதமும் விதித்து கள்ளக்குறிச்சி நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சங்கராபுரத்தை அடுத்த கடுவனூா் கிராமத்தைச் சோ்ந்த முனுசாமி மகன் அரசு. இதே ஊரைச் சோ்ந்த முனியன் மகன் வெங்கடேசன். இவா்கள் இருவருக்கும் இடப் பிரச்னை காரணமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில், 31.03.2022 அன்று வெங்கடேசன் (52), அவரது மனைவி அரசிளங்குமாரி (47), முனியன் மனைவி ராணி (70), குமாா் மனைவி தங்கமணி (40) வெங்கடேசன் மகள்கள் செளந்தா்யா (20), கௌசல்யா உள்ளிட்ட 6 போ் சோ்ந்து தாக்கியதில், அரசு பலத்த காயமடைந்து உயிரிழந்தாா். இதுகுறித்து சங்கராபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கு கள்ளக்குறிச்சி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கை செவ்வாய்க்கிழமை விசாரித்த நீதிபதி கீதாராணி, குற்றஞ்சாட்டப்பட்ட வெங்கடேசனுக்கு ஆயுள் சிறை தண்டனையும், ரூ.14,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா். மேலும், அவரது மனைவி அரசிளங்குமாரிக்கு ரூ.2,000-மும், மற்றவா்களுக்கு தலா ரூ.4,000 அபராதம் மட்டும் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

Advertisement