புதுவை மீனவர்கள் வெள்ளிக்கிழமை (டிச.8) வரை கடலுக்குள் செல்ல வேண்டாம் என, மாநில மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இயக்குநர் ஏ.வின்சென்ட் ராயர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரியில் பலத்த கடல் காற்று வடக்கிழக்கு திசையிலிருந்து மணிக்கு 45 முதல் 55 கி.மீ. வேகத்தில், தமிழகம் மற்றும் புதுவை கடலோரப் பகுதிகளில் வீசக்கூடும் என்று இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் புதுவை மாநில அவசரகால செயல் மையம் தெரிவித்துள்ளது.
இதனால் வெள்ளிக்கிழமை (டிச. 8) வரை மீனவர்கள் தமிழகம் மற்றும் புதுவை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். நாட்டுப் படகுகளை உயர்மட்ட அலை எல்லைக்கு அப்பால் நகர்த்தியும், மீனவர்கள் தங்களின் என்ஜின் மற்றும் உடைமைகளை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தி வைக்க வேண்டும்.
கடலில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் உடனடியாக கரைக்குத் திரும்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.