புதுச்சேரி கோயில்களில் சனிப்பெயர்ச்சியையொட்டி சிறப்பு பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை சனி பகவான், ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடம்பெயருகிறார். இதன்படி, செவ்வாய்க்கிழமை காலை 10.01 மணிக்கு விருச்சிக ராசியில் இருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆனார்.
இதையொட்டி, புதுவையில் உள்ள சிவாலயங்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன. காலை 6.30 மணிக்கு பூர்வாங்க பூஜைகளும், தொடர்ந்து நவக்கிரக கலச பூஜை, பரிகார ஹோமம், சிறப்பு அபிஷேகம் ஆகியவை நடைபெற்றன.
புதுச்சேரி காந்தி வீதி வேதபுரீஸ்வரர் கோயில், பாகூர் மூலநாதர் கோயில், வீராம்பட்டிணம் செங்கழுநீரம்மன் கோயில், பூரணாங்குப்பம் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில், வசந்தம் நகர் கற்பக விநாயகர் கோயில், ஞானமேடு சொர்ண பைரவர் உள்ளிட்ட கோயில்களில் சனிப்பெயர்ச்சி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. 27 அடி உயர சிலையில் வழிபாடு:
புதுச்சேரி அருகே உள்ள மொரட்டாண்டி பகுதியில் சனீஸ்வர பகவான் கோயில் உள்ளது. இங்கு சனிப்பெயர்ச்சியையொட்டி இங்குள்ள 27 அடி உயர விஷ்வரூப சனீஸ்வரர் சிலைக்கு சிறப்பு அர்ச்சனை மற்றும் தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்று வழி பட்டனர். விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்கு சனி பகவான் பெயர்ச்சி ஆவதையொட்டி பக்தர்கள் நேர்த்திக் கடனான செலுத்திய 8000 லிட்டர் நல்லெண்ணை 80 அடி உயர மகர கும்பத்தில் செவ்வாய்க்கிழமை மாலை ஊற்றப்பட்டது. பின்னர், மகர தீபம் ஏற்றப்பட்டது. உலக நன்மைக்காக இந்த மகர தீபம் ஏற்றப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.