புதுச்சேரியில் மருத்துவப் படிப்புகளுக்கான சென்டாக் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு அடுத்த ஆண்டு முதல் ஆன்லைன் மூலம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் தெரிவித்தார்.
புதுச்சேரியில் கடந்த 2 நாள்களாக எம்பிபிஎஸ் மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு நடைபெற்று வந்தது. இந்த நிலையில், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு அகில இந்திய அளவிலான கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் பெற்றோர், மாணவர் சங்கம், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று தேதி குறிப்பிடப்படாமல் கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், சுகாதாரத் துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அடுத்த ஆண்டு முதல் முதுநிலை , இளநிலை மருத்துவப் படிப்புக்கான கலந்தாய்வு ஆன்லைன் மூலம் நடத்தப்படும். இதனால் எந்தப் பிரச்னையும் எழாது. முதுநிலை மருத்துவப் படிப்பு கலந்தாய்வின் போது துணைநிலை ஆளுநர் கிரண் பேடியின் நடவடிக்கையால், நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இதுவரை பெற்றுவந்த 137 இடங்களை இந்தாண்டு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என அவர் குற்றம் சாட்டினார்.
ஜூலை 24 ஆம் தேதிக்குள் முதல் கட்ட கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்ற மருத்துவ கவுன்சிலின் உத்தரவின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற்றது.
மருத்துவப் படிப்புக்கு மொத்தம் உள்ள 293 இடங்களில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 8 இடங்களும் , தாழ்த்தப்பட்ட பிரிவுகளும் காலியாக உள்ளன. ஏனைய இடங்கள் அனைத்தும் நிரம்பிவிட்டன என்றார் மல்லாடி.