எடையளவு இயந்திரங்களுக்கு முத்திரையிடுவதற்கான சிறப்பு முகாம் வருகிற 14-ஆம் தேதி தொடங்குகிறது. இதுதொடர்பாக புதுச்சேரி சட்டமுறை எடை அளவுத் துறைக் கட்டுப்பாட்டு அதிகாரி ஜான்சன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: புதுச்சேரியின் பல பகுதிகளில் உள்ள அங்காடிகளில் உபயோகிக்கப்படும் எடைக் கள், அளவைகள், எடையளவு இயந்திரங்கள் ஆகியவற்றைக் கட்டுப்பாட்டு அதிகாரி உத்தரவின்படி, உதவி கட்டுப்பாட்டு அதிகாரி, ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.
சட்டமுறை எடையளவுத் துறை அலுவலகம் தட்டாஞ்சாவடியில் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் எடைக் கற்கள் மற்றும் அளவைகள் ஆகியவற்றைச் சரிபார்த்து சான்றிதழ் அளிக்கப்படுகிறது. வணிகர்கள் அனைவரும் தங்களது எடைக் கற்கள், அளவைகள், எடையளவு இயந்திரங்களை உரிய தொகையைச் செலுத்தி, அரசாங்க முத்திரையைப் பதித்து, சான்றிதழ் பெற வேண்டும்.
மின்னணு தராசுகளை வாங்கும் போது, அந்த இயந்திரத்தின் தன்மைகளைக் குறிப்பிடும் அடையாளத் தகடு, அரசாங்க முத்திரை பதித்ததற்கான சான்றிதழை அவசியம் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு இல்லாத தராசுகள் எடையளவுத் துறை ஆய்வாளர்களால் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
மேலும், வணிகர்களின் நலன் கருதி, எடையளவுத் துறை ஆய்வாளர்கள்புதுச்சேரியில் உள்ள முக்கிய வியாபார மையங்களுக்குச் சென்று எடைக் கற்கள், அளவைகள், எடையளவு இயந்திரங்களில் முத்திரையிட உள்ளனர். இதற்கான சிறப்பு முகாம்கள் கீழ்க்கண்ட நாள்களில் நடைபெறும்.
அதன்படி, நவம்பர் 14, 15-ஆம் தேதிகளில் பெரிய மார்க்கெட், 16-ஆம் தேதி முத்தியால்பேட்டை மார்க்கெட், 17-ஆம் தேதி வில்லியனூர் மார்க்கெட், 21-ஆம் தேதி மதகடிப்பட்டு மார்க்கெட், 22-ஆம் தேதி திருக்கனூர் மார்க்கெட், 23-ஆம் தேதி மடுகரை மார்க்கெட், 24-ஆம் தேதி பாகூர் மார்க்கெட் ஆகிய பகுதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறும்.
இந்த வாய்ப்பை வணிகர்கள் அனைவரும் தவறாமல் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.