பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் 108 நாள் பூஜை தொடக்கம்
அரசுப் பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற வேண்டி, புதுச்சேரி முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
அரசுப் பொதுத்தேர்வில் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெற வேண்டி, புதுச்சேரி முத்தியால்பேட்டை லட்சுமி ஹயக்ரீவர் கோயிலில் சிறப்பு பூஜை ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. தொடர்ந்து 108 நாள்களுக்கு இந்த பூஜை நடைபெறவுள்ளது.
ஸ்ரீ ஹயக்ரீவர் அவதாரம் கடவுளின் முதல் அவதாரம் எனக் கூறப்படுகிறது. கல்விக்கு அதிபதியான ஹயக்ரீவரை வழிபட்டால் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர் என்பது ஐதீகம். இதனால் ஆண்டுதோறும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்வது வழக்கம்.
அதன்படி, மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கி, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற வேண்டி, இக்கோயிலில் 15- ஆவது ஆண்டாக லட்சார்ச்சனை மற்றும் சகஸ்ரநாம அர்ச்சனை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
காலை 10 முதல் பகல் 1.30 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் லட்சுமி ஹயக்ரீவருக்கு சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் ஏக தின லட்சார்ச்சனை நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் தங்களது பெற்றோர்களுடன் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து, 108 நாள்களுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை நடைபெற உள்ளது. பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் சிறப்பு அதிகாரி, பக்த ஜன சபையார் செய்திருந்தனர்.