முகப்பு
புதுச்சேரி

கடல் உயிரினங்களுக்கு ஆபத்து: பிளாஸ்டிக்கிற்கு தடை விதிக்க மீனவர் பேரவை கோரிக்கை

கடல் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.

Updated On : 9 ஜூலை, 2018 at 9:26 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

கடல் உயிரினங்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக்கிற்கு முற்றிலும் தடை விதிக்க வேண்டும் என்று தேசிய மீனவர் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது.
 தேசிய மீனவர் பேரவையின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்றது.
 கூட்டத்துக்கு தலைமை வகித்து பேரவையின் தேசியத் தலைவர் மா.இளங்கோ பேசியதாவது:
 உலகம் முழுவதும் பயன்படுத்தக்கூடிய அழியாத தன்மையுள்ள, மாசு உருவாக்கக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகளில் 80 சதவீதம் கடல்களில் தான் கலக்கப்படுகிறது.
 கடல்களை மாசுபடுத்தும் 80 சதவீத காரணிகள் பிளாஸ்டிக் கழிவுகளாகத்தான் உள்ளன.
 ஒவ்வொரு ஆண்டும் 80 லட்சம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் கடலில் கொட்டப்பட்டு, மீன்கள், அரியவகை உயிரினங்கள் வாழ்வில் பேரழிவை ஏற்படுத்துகிறது.
 திமிங்கிலம் போன்ற பாலூட்டி இனங்களையும், கடல் பறவைகளையும் உயிரிழக்கச் செய்கிறது. கடந்த வாரம் தாய்லாந்தில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் இருந்து 8 கிலோ பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தன.
 பிளாஸ்டிக் கழிவுகளை மீன்கள் உண்பதும் அந்த மீன்களை மனித இனம் உண்பதும் நடைமுறையாகிவிட்டது. ஒவ்வொரு நாளும் கடல் சுற்றுச்சுழல் மிகப்பெரும் அளவில் பாழாகி வருகிறது.
 தற்போது கடலில் மீன்கள் கிடைக்காமல் மீனவர்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
 நாட்டு மக்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் புரதச் சத்தான மீன் உணவு கிடைக்காமல் போகக்கூடிய அபாய அறிகுறிகள் தென்படுகிறது. இதனால் நாட்டு மக்களுக்கு துணை உணவுக்கான பஞ்சம் ஏற்படக்கூடும்.
 எனவே மத்திய, மாநில, அரசுகள், உள்ளாட்சி அமைப்புகளிடம் பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளது.
 கேடு விளைவிக்கும் பிளாஸ்டிக் உற்பத்தியையும், உபயோகத்தையும் மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும். தமிழகத்தைப் போல் அனைத்து மாநிலங்களும் தடை அமலுக்கு வரும் தேதியை குறிப்பிட்டு அரசாணை பிறப்பிக்க வேண்டும்.
 புதுவை மாநிலத்திலும் தடை அமலுக்கு வரும் தேதியை குறிப்பிட்டு அரசாணை வெளியிடவேண்டும். நிகழ் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் அதற்கானஅறிவிப்பை வெளியிட வேண்டும் என்றார் இளங்கோ.
 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.