புதுவை மாநிலம், பாகூரில் மோட்டார் பைக் திருடியதாக ஒருவரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
புதுச்சேரியை அடுத்த பாகூர் மாரியம்மன் நகரைச் சேர்ந்தவர் பாலமுருகன் (28), இவர் கடந்த நவ. 16-ஆம் தேதி இரவு தனது மோட்டார் பைக்கை வீட்டு வாசல் முன்பு நிறுத்திவிட்டு, தூங்கச் சென்றாராம். நள்ளிரவில் மோட்டார் பைக்கின் பூட்டு உடைக்கும் சப்தம் கேட்டு பாலமுருகன் வீட்டில் இருந்து வெளியே வந்தார்.
அப்போது, இளைஞர் ஒருவர் மோட்டார் பைக்கின் பூட்டை உடைப்பதைக் கண்டு சப்தமிட்டார். உடனடியாக அக்கம் பக்கத்தினர் திரண்டு வந்து அந்த இளைஞரைப் பிடித்து பாகூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
காவல் உதவி ஆய்வாளர் ஜெயகுருநாதன் தலைமையிலான போலீஸார் அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அந்த இளைஞர் பெரியகாலாப்பட்டு சுனாமி குடியிருப்புப் பகுதியைச் சேர்ந்த சுபாஷ் (26) என்பதும், அவர் மீது கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, தவளக்குப்பம் உள்ளிட்ட பகுதியில் ஏராளமான வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து, போலீஸார் அவரைக் கைது செய்து, விசாரித்து வருகின்றனர்.