பொறியியல் கல்லூரி தேர்வு முடிவை வெளியிடுவதில் மோசடி நடந்துள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் புதுவை கல்வித் துறை அமைச்சர் ஆர்.கமலக்கண்ணனுக்கு புதுச்சேரி மாநில மாணவர்கள் - பெற்றோர் நலச் சங்கம் கோரிக்கை மனு அனுப்பியது.
இதுகுறித்து இந்தச் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியன் சனிக்கிழமை அனுப்பியுள்ள மனுவின் விவரம்:
புதுச்சேரி பொறியியல் கல்லூரி கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் தன்னாட்சி பெற்ற அமைப்பாகச் செயல்பட்டு, மாணவருக்கான தேர்வுகளை நடத்தி, முடிவுகளை வெளியிட்டு வருகிறது. தேர்வில் மாணவர்கள் மோசடியில் ஈடுபட்டால் அவர்களது குறிப்பிட்ட செமஸ்டரில் அத்தனை தேர்வையும் ரத்து செய்யப்படும் என்பது விதி.
அதன்படி, கடந்த 3 ஆண்டுகளில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் விதிகளை மீறி முறைகேடாகத் தேர்வை எழுதியது கண்டறியப்பட்டது.
அந்த மாணவர்களின் தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது கல்லூரி நிர்வாகம் மாணவர்கள் சிலர் வெற்றி பெற்றதாக தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது.
இந்தத் தவறுக்கு கல்லூரி முதல்வரும், தேர்வுத் துறை அதிகாரியும் முழு பொறுப்பேற்க வேண்டும். இதுபோல, பல ஆண்டுகளாகத் தேர்வுத் துறையிலும், பல்வேறு துறைகளிலும் மோசடி நடைபெற்று வருகிறது.
எனவே, இதன் மீது உரிய விசாரணை நடத்தி தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.