புதுச்சேரி பூரணாங்குப்பம் கிராமத்தில் இலவச சிலம்ப பயிற்சி முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பூரணாங்குப்பம் மாமல்லன் சிலம்பம் - நாட்டுப்புறக் கலை வளர்ச்சிக் கழகத் தலைவர் பழனிவேல் தலைமை வகித்தார். பூரணாங்குப்பம் பெரியாண்டவர் கிராமியக் கலைக் குழுத் தலைவர் வெற்றிவேல் வரவேற்றார். மூத்த சிலம்ப ஆசிரியர் சிலம்பு சேகர் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி வைத்து முகாமைத் தொடக்கி வைத்தார். இதைத் தொடர்ந்து, முகாமில் கலந்து கொண்ட புதிய மாணவர்களுக்கு சிலம்பு பயிற்சியும் அளித்தார். இதுகுறித்து சிலம்ப ஆசியர் பழனிவேல் கூறியதாவது: ஆண்டுதோறும் கோடை காலத்தில் மாணவர்களிடையே தற்காப்பு கலையை வளர்க்கும் விதத்தில் இந்தப் பயிற்சி முகாம் நடத்தப்பட்டு வருகிறது. 17-ஆவது ஆண்டாக நிகழாண்டும் தொடர்ந்து 45 நாள்கள் சிலம்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. முகாமின் சிறப்பு அம்சங்களான சிலம்பத்தில் உள்ள பல்வேறு வகைகள், ஜிம்னாஸ்டிக், அக்ரோயோகா, மல்யுத்தம், கிராமிய நடனம், குத்துவரிசை, வாள் சண்டை, பிரமிடு வகைகள் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பயிற்சிகள்அளிக்கப்படுகின்றன. பயிற்சி முகாமின் நிறைவில் சான்றிதழ், நினைவு பரிசுகள் வழங்கப்படும். கோடை கால விடுமுறையில் மாணவர்களுக்கு பல்வேறு பயிற்சி வகுப்புகள் அரசு மற்றும் தனியார் மூலமாக நடத்தப்படுகிறது. எந்தப் பயிற்சியில் சேர ஆர்வமுள்ளதோ, அதில் சேர்ந்து மாணவர்கள் தங்களது திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இதேபோல, தற்காப்புக் கலைகளில் ஒன்றான சிலம்பக் கலையில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கு பெற்று பயனடைய வேண்டும். இந்தக் கலை தமிழர்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றாகும் என்றார் அவர்.