ஒப்பந்த ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, பிஎஸ்என்எல் ஊழியர்கள் சங்கம், தமிழ்நாடு தொலைத்தொடர்பு ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பில் புதுச்சேரியில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ரெட்டியார்பாளையம் ஜெயா நகரில் உள்ள மத்திய தொழிலாளர் துறை இணை ஆணையர் அலுவலகம் எதிரே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு பிஎஸ்என்எல் ஊழியர் சங்க புதுச்சேரி பிரதேச தலைவர் கொளஞ்சியப்பன், ஒப்பந்த ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் குமார் ஆகியோர் தலைமை வகித்தனர்.
இதில், பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்களுக்கு 7 மாதங்களாக சம்பளம் வழங்காத மத்திய அரசைக் கண்டித்தும், பிஎஸ்என்எல் நிறுவனத்தில்
4 ஜி சேவையை உடனடியாக வழங்க வலியுறுத்தியும், ஆள்குறைப்பு செய்வதைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
முன்னதாக, பிஎஸ்என்எல் ஊழியர்கள் இந்திரா காந்தி சதுக்கத்தில் இருந்து ஊர்வலமாக வந்தனர். தொழிலாளர் நல இணை ஆணையரிடம் கோரிக்கைகள் அடங்கிய மனு அளிக்கப்பட்டது.