மசாஜ் மையங்களில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிக்காவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி போலீஸார் எச்சரிக்கை விடுத்தனர்.
புதுச்சேரி வடக்குப் பகுதியில் உள்ள அழகு நிலையங்கள், மசாஜ் நிலையங்களை முறைப்படுத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் புதுச்சேரி வடக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வடக்குப் பிரிவு காவல் கண்காணிப்பாளர் ஜிந்தா கோதண்டராமன் தலைமை வகித்தார். இதில் மசாஜ் நிலையங்கள், அழகு நிலையங்களின் நிர்வாகிகள் 35-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நகராட்சியின் உரிய அனுமதியின்றி அழகு நிலையங்கள், மசாஜ் மையங்கள் செயல்படக் கூடாது.
இந்த நிலையங்களில் மசாஜ் அல்லது அழகு சிகிச்சைகள் என்ற பெயரில் விபசாரம் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பயிற்சியற்ற ஊழியர்களைப் பணியில் அமர்த்தக் கூடாது.
ஊழியர்களைப் பணியமர்த்தும் முன்பு, அவர்களின் முன் குற்ற நடவடிக்கைகளை சம்மந்தப்பட்ட காவல் நிலையத்தில் பெற்றப் பிறகே பணியமர்த்த வேண்டும்.
அழகு நிலையங்களில் ஏதேனும் பிரச்னைகள் ஏற்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் அளிக்க வேண்டும்.
உரிய உரிமம் பெற்று நியாயமான முறையில் நிலையங்களை நடத்தினால் போலீஸாரின் தொந்தரவு இருக்காது. கண்டிப்பாக இரவில் மசாஜ் நிலையங்களை நடத்தக் கூடாது. உரிய பதிவேட்டைக் கையாள வேண்டும்.
இதை போலீஸார் ஆய்வு செய்ய வரும் போது, காண்பிக்க வேண்டும்.
மசாஜ் நிலையங்கள், அழகு நிலையங்களில் கண்டிப்பாக கண்காணிப்பு கேமராவை பொருத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
கூட்டத்தில், தன்வந்திரி நகர் காவல் ஆய்வாளர் கண்ணன், மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் சண்முகசுந்தரம், லாசுப்பேட்டை காவல் ஆய்வாளர் நாகராஜன், ரெட்டியார்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் வீரபுத்திரன், மேட்டுப்பாளையம் காவல் உதவி ஆய்வாளர் இனியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.