வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 25 ஆண்டுகளாகக் குடியிருக்கும் பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்க வேண்டும் என மக்கள் உரிமைக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
இதுகுறித்து அந்த அமைப்பின் செயலர் சுகுமாரன், தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு அண்மையில் அனுப்பிய மனு விவரம்:
புதுவை மாநிலம், வில்லியனூர் பெருமாள்புரத்தில் கடந்த 25 ஆண்டுகளாக பழங்குடியினத்தைச் சேர்ந்த 24 குடும்பத்தினர் குடியிருந்து வருகின்றனர். இவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஆதார் அட்டை, மின் இணைப்பு, தண்ணீர் இணைப்பு என அனைத்தும் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 2011- ஆம் ஆண்டு நில அளவைத் துறை இயக்குநர், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையருக்கு எழுதிய கடிதத்தில், இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்காக வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்குச் சொந்தமான இடத்தை நில அளவைத் துறைக்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார். ஆனால், இதன் மீது எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பழங்குடியின மக்கள் பல ஆண்டுகளாக பல கட்டப் போராட்டங்கள் நடத்தியும் அந்த மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா வழங்கப்படவில்லை. எனவே, அரசு இதில் தலையிட்டு பழங்குடியின மக்களுக்கு வீட்டுமனைப் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதேபோல, துணைநிலை ஆளுநர் கிரண் பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோருக்கும் தனித் தனியாக மனுக்கள் அனுப்பப்பட்டுள்ளன.