முகப்பு
புதுச்சேரி

அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார நினைவு வழிபாடு

அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில்  மகிஷ சம்ஹார நினைவு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக திங்கள்கிழமை இரவு மின் அலங்கார புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது.

Updated On : 31 ஜனவரி, 2024 at 8:01 AM
பகிர்:

அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில்  மகிஷ சம்ஹார நினைவு வழிபாடு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. முன்னதாக திங்கள்கிழமை இரவு மின் அலங்கார புஷ்ப பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
காரைக்கால் மாவட்டம், திருநள்ளாறு அருகே உள்ள அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோயிலில் வருடாந்திர மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா கடந்த 6-ஆம் தேதி  மகா மாரியம்மனுக்கு பூச்சொரிதலுடன் தொடங்கியது. கடந்த 20-ஆம் தேதி தீமிதி உத்ஸவம் நடைபெற்றது.
முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக பத்ரகாளியம்மன் தேவ விமானத்தில் வீதியுலா எழுந்தருளும் நிகழ்ச்சி 24-ஆம் தேதியும், புஷ்ப பல்லக்கு வீதியுலா நிகழ்ச்சி திங்கள்கிழமை இரவு 12 மணிக்கு நடைபெற்றது.
புஷ்ப பல்லக்கு புறப்படும் முன்பாக அலங்கரிக்கப்பட்ட பத்ரகாளியம்மனுக்கு சிறப்பு ஆராதனைகள் மண்டபத்தில் நடத்தப்பட்டன. தொடர்ந்து  சிறப்பு மேள நாகசுர வாத்தியங்கள் முழங்க மின் அலங்கார புஷ்ப பல்லக்குக்கு எழுந்தருளச் செய்யப்பட்டார். சிறப்பு தீபாராதனைக்குப் பின்னர் வீதியுலா புறப்பாடு தொடங்கியது. வீதியுலா முடிந்து செவ்வாய்க்கிழமை அதிகாலை பல்லக்கு கோயிலை சென்றடைந்தது. இந்த நிகழ்ச்சியில் நிர்வாக அலுவலர் (கோயில்கள்) ஜெ.சுந்தர், கோயில் அறங்காவலர்கள் உள்ளிட்ட திரளானோர் கலந்துகொண்டனர்.
மகிஷ சம்ஹார நினைவு வைபவம்: முக்கிய நிகழ்ச்சியான மகிஷ சம்ஹாரத்தை நினைவுபடுத்தி நடத்தும் வழிபாடு செவ்வாய்க்கிழமை பகல் 12 மணியளவில் நடைபெற்றது. மூலஸ்தானத்தின்  அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. பூஜை செய்யப்பட்ட எலுமிச்சம் பழத்தை சன்னிதி வாயிலில் காவு கொடுக்கும் விதமான நிகழ்ச்சி நடத்தப்பட்டு சிறப்பு ஆராதனை நடைபெற்றது.
 சம்ஹார நினைவையொட்டி ஏராளமான பக்தர்கள் ஆடு, மாடு, கோழிகளை கோயில் நிர்வாகத்திடம் காணிக்கையாக வழங்கி அம்பாளை தரிசனம் செய்தனர். இன்று புதன்கிழமை எல்லை ஓடுதல் வழிபாடும், வியாழக்கிழமை ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருத்தேர் வீதியுலாவும், வெள்ளிக்கிழமை விடையாற்றி நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. ஜூன் 4-ஆம் தேதி  செவ்வாய்க்கிழமை  பகல் 12 மணியளவில் உதிரவாய் உத்ஸவமாக சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறவுள்ளன.  திருவிழா தொடக்கம் முதல்  கலைநிகழ்ச்சிகளாக மங்கள இசை, பரத நாட்டியம், இன்னிசை, நாடகம், பட்டிமன்றம், கிராமிய இசை நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்று வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments