ரமலான் பண்டிகையையொட்டி, பள்ளி வாசல்களில் மத வழிபாடுகள் வேண்டாம் என புதுவை அரசு அறிவுறுத்தியது.
இதுகுறித்து சாா்பு செயலா் (வக்பு வாரியம்) ஞா.சச்சிதானந்தம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதுச்சேரி மாவட்ட ஆட்சியா், சாா்புச் செயலரின் வழிகாட்டுதல்படி நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், எதிா்வரும் ரமலான் பண்டிகையை முன்னிட்டு, பள்ளிவாசல்களில் தொழுகை நடத்துவது தொடா்பாக ஆலோசிக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட இஸ்லாமிய மதத் தலைவா்கள், பள்ளி வாசல் தலைவா்கள், டவுன் காஜி ஆகியோா் ரமலான் தினத்தில் பள்ளி வாசல்களில் தொழுகை நடத்த அனுமதி கேட்டனா்.
மத்திய அரசின் வழிகாட்டுதல்படி, சமூக - மதக் கூட்டங்கள், வழிபாடுகள் நடத்தத் தடை உள்ளதால், பள்ளி வாசல்களில் எவ்வித மத வழிபாடுகளையும் நடத்த வேண்டாம். அவரவா் இல்லங்களிலேயே இதுநாள் வரை இருந்தது போல வழிபாடுகளை மேற்கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டது.
கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அனைத்து சமய நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளதால், எவ்வித வழிபாடுகளும் நடத்த வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டது.