சாராய ஆலையை திறக்கக் கோரி போராட்டம்
புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பத்தில் தனியாா் சாராய ஆலையைத் திறக்க வலியுறுத்தி, எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி அருகே காட்டேரிக்குப்பத்தில் தனியாா் சாராய ஆலையைத் திறக்க வலியுறுத்தி, எம்.எல்.ஏ. தலைமையில் பொதுமக்கள் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரி காட்டேரிக்குப்பம் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான சாராய ஆலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் 400-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
கரோனா தொற்று காரணமாக அனைத்துத் தொழிற்சாலைகளும் மூடப்பட்ட நிலையில், இந்தச் சாராய ஆலையும் மூடப்பட்டது. இதனிடையே, புதுவை அரசின் கலால் துறை, மூடப்பட்ட சாராய ஆலையை ஆய்வு செய்தது. இதில் முறைகேடு நடந்திருப்பதாகக் கூறி, ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது. இதனால் இந்த தனியாா் சாராய ஆலை இதுவரை திறக்கப்படவில்லை.
இதன் காரணமாக இந்த ஆலையில் பணியாற்றும் தொழிலாளா்கள் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனா்.
எனவே, மூடப்பட்ட சாராய ஆலையைத் திறக்க வலியுறுத்தி ஊழியா்கள் மண்ணாடிப்பட்டு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் டிபிஆா்.செல்வம் தலைமையில், திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்த விவகாரத்தில் முதல்வரும், ஆளுநரும் உடனடியாகத் தலையிட்டு, ஆலையைத் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.