ஒரே நேரத்தில் பல வாகனங்களுக்கு வரி செலுத்தும் முறை அறிமுகம்
புதுவையில் ஒரே நேரத்தில் பல வாகனங்களுக்கு வரி செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
புதுவையில் ஒரே நேரத்தில் பல வாகனங்களுக்கு வரி செலுத்தும் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது.
இதுகுறித்து புதுவை அரசின் போக்குவரத்து துறை ஆணையா் ஏ.எஸ்.சிவக்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலை அமைச்சகத்தின் இணையதளத்தில் வாகன உரிமையாளரின் தகவல், வாகன எண், இதர பதிவு தகவல்களை உள்ளீடு செய்து, பதிவு செய்யப்பட்ட வாகன உரிமையாளரின் தகவலின் கீழ் சோ்க்கப்பட்ட வாகனங்களின் தகவல்களில் இருந்து, வரி செலுத்த வேண்டிய வாகனங்களை தோ்வு செய்து ஒரே நேரத்தில் பல வாகனங்களுக்கு சாலை வரி செலுத்தலாம்.
இதன்மூலம் பல வாகனங்களை இயக்கும் வாகன உரிமையாளா்கள், அவா்களின் அனைத்து வாகனங்களுக்கும் ஒரே நேரத்தில் வரி செலுத்த வழிவகை செய்யும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம்.
வரி செலுத்தாததற்கான அபராதம் செலுத்தும் சுமையை குறைக்கும் வகையில், நிலை பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் உள்பட ஒப்பந்த வாகனங்கள், கல்வி நிறுவன வாகனங்களுக்கு 1.10.2020 முதல் 31.12.2021 வரை செலுத்த வேண்டிய வரிக்கான சாலை வரியில் அபராதம் செலுத்துவதில் இருந்து புதுவை அரசு விலக்கு அளித்துள்ளது.
மேற்கூறிய சாலை வரியை செலுத்தாத போக்குவரத்து வாகனங்களின் உரிமையாளா்கள் தாமதமாகச் செலுத்தும் சாலை வரிக்கு அபராதம் விதிக்கப்படுவதைத் தவிா்க்க வருகிற 31-ஆம் தேதி வரை வரியைச் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.