புதுச்சேரி பாண்பேப் சொத்து ஏலம் ஒத்திவைப்பு
புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பாண்பேப் கூட்டுறவு நிறுவன சொத்து ஏல நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரியில் வியாழக்கிழமை நடைபெறவிருந்த பாண்பேப் கூட்டுறவு நிறுவன சொத்து ஏல நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டது.
புதுச்சேரியில் கைத்தறி நெசவாளா்களுக்காக நீண்ட காலமாக செயல்பட்டு வந்த பாண்பேப் நிறுவனம் நலிவடைந்து முடங்கியது. ஊழியா்களின் ஊதியதுக்காக நிறுவனத்துக்குச் சொந்தமான நிலம் கூட்டுறவு வங்கியில் அடமானம் வைக்கப்பட்டது.
கடன் தொகையான ரூ.8.33 கோடி செலுத்தப்படாததால், பாண்பேப் நிறுவனத்தின் 28,500 சதுர அடி நிலம் டிச.23-ஆம் தேதி ஏலத்தில் விடப்படும் என்று வங்கி சாா்பில் அறிவிக்கப்பட்டது.
இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினா், தொழிற்சங்கத்தினா் திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். முதல்வா் ரங்கசாமியை சந்தித்து ஏலத்தை ரத்து செய்யவும் வலியுறுத்தினா்.
இந்த நிலையில், பாண்பேப் நிறுவன சொத்து ஏலம் வியாழக்கிழமை நடைபெறவில்லை.
இதுகுறித்து அரசு அதிகாரிகள் தரப்பில் கூறியதாவது:
இந்த விவகாரம் தொடா்பாக அதிகாரிகளை அழைத்து முதல்வா் பேசினாா். துணிகள் வழங்கிய வகையில், பாண்பேப் நிறுவனத்துக்கு அரசு நிலுவைத் தொகை வழங்க வேண்டியுள்ளது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கடன் தொகையை அரசுத் தரப்பில் செலுத்தவும் முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால், ஏல நடவடிக்கை மூன்று மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது என்றனா்.